ஒவ்வொருவனுக்கும் மூன்றுவிதச் சக்தி வேண்டும்:
1. அறிவு
2. செல்வம்
3. தைரியம்
இந்த மூன்றும் நமக்கு இகலோகத்திலே கிடைக்கும்படியாகவும் இதனால் பரலோக இன்பங்களுக்கும் சாத்தியமாகும்படியாகவும், நாம் தெய்வத்தை வழிபடுகிறோம். முக்திக்கு, மாத்திரமே தெய்வத்தை நம்புவது சிலருடைய வழி; இகலோக இன்பங்களுக்கும் தெய்வமே துணை என்று நம்பி, இன்பங்கள் வேண்டுமென்று தெய்வத்திடம் கேட்டு வாங்கிக் கொள்வது மற்றொரு வழி. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு பரமசிவன் என்னவெல்லாம் செய்தார்? அர்ச்சுனன் தனக்கு சுபத்திரையை வசப்படுத்திக் கொடுக்கும்படி யாரிடத்தில் கேட்டான்? ஸ்ரீகிருஷ்ணரிடத்திலே கேட்டான். ஸ்ரீகிருஷ்ணன் சுபத்திரையைக் கவர்ந்து செல்வதற்கு வேண்டிய உபாயங்கள் காட்டினார். ஆம், தெய்வம் எல்லாம் செய்யும்.
இகலோகத்தில் எல்லாவிதமான இன்பங்களும் நமக்கு வேண்டும். அவற்றை வசமாக்குவதற்கு அவசியமான அறிவுத் திறனை நமக்குத் தரும்படி தெய்வத்தைக் கேட்கிறோம்.
“தெய்வமே நான் தூங்குகிறேன். நீ எனக்கு மாம்பழம் கொடு” என்று கேட்கவில்லை.
“தெய்வமே தெய்வமே மாம்பழ விஷயத்தில் நீ எனக்கு இத்தனை ருசி ஏற்படுத்திக் கொடுத்த தெய்வமே! உனக்குப் புண்ணியமுன்டு. மா விதை எங்கே அகப்படும்? ஒட்டு மாஞ்செடி எப்படி வளர்ப்பது? சொல்லு. பாடுபடச் சம்மதம்; காத்துக் கொண்டிருக்கச் சம்மதம். ஆனால் மாம்பழம் கொடுத்துத் தீர வேண்டும். நீ தானே இந்த ருசியை ஏற்படுத்தினாய்?” என்று கேட்கிறோம். இது நியாயமான கேள்வி. தெய்வம் உதவி செய்யும்.
விக்கிரமாதித்யன் வணங்கிய தெய்வம்; காளிதாஸனுக்குக் கவிதை காட்டிய தெய்வம்; பாரத நாட்டு மஹா ஜனங்கள் இன்னும் தலைமையாகக் கொண்டாடும் தெய்வம்; ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் சக்தியாக விளங்கும் லக்ஷ்மி தேவதை; சிவபிரானுடைய வலிமையாகத் திகழும் பார்வதி, பிரமதேவன் தலைவியாகிய சரஸ்வதி; மூன்று மூர்த்திகள்; மூன்று வடிவங்கள்; பொருள் ஒன்று; அதன் சக்தி ஒன்று; பொருளும் அதன் சக்தியும் ஒன்றே. இங்ங்னம் ஒன்றாக விளங்கும் சக்தி என்ற தெய்வத்தை ஹிந்துக்கள் உபாஸனை செய்வதற்கு விசேஷப் பருவமாக இந்த நவராத்திரியின் காலத்தை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன?
பராசக்தி மழையருள் புரியும் சரத்காலத்தின் ஆரம்பமென்று கருதியா? சரத்காலம் நம் நாட்டில் ஒன்று போல எல்லாப் பகுதிகளிலும் தொடங்கவில்லை யாயினும், ஓரிடத்திலே தோன்றிய திருவிழா நாடு முழுவதும் பரவி யிருக்கலாம்.
‘மஹாளய அமாவாஸ்யை’ என்பது யோகாநுபவத்தில் மரணத்திற்குப் பெயர். அதைத் தப்பிய புதிய உயிர் கொண்டவுடன், சேர்ந்தபடியாகப் பலநாள் பராசக்தியை இடைவிடாமல் உபாஸனை செய்ய வேண்டுமென்ற கொள்கையின் அறிகுறியாக இருக்கலாம். கும்பகோணம் சங்கராச்சாரிய மடத்திலிருந்து பாரிகைகளுக்கு வந்த தந்தி ஒன்றிலே நவராத்திரிப் பூஜைக்கு புராணப்படி முகாந்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. நவராத்திரி காலத்தில் தேவி (யோகமாயை)லக்ஷ்மி, ஸரஸ்வதி, துர்க்கை என்று மூன்று விதமாக அவதாரம் செய்து பல அசுரர்களை அழித்ததாகவும் அது முதல் வருஷந்தோறும் நமது தேசத்தில் இந்தத் திருவிழா நடந்து வருவதாகவும் மடத்தார் தந்தியில் விளக்கப்பட்டிருக்கிறது. இது புராண ஐதீகம். இதற்குப் பொருள் அத்யாத்மம்.
பராசக்தி எங்கும் இருக்கிறாள். எப்போதும் அவள் இருக்கிறாள். தொழிலே உலகம். அவளே உலகம், குழந்தைகளும் ஸாமான்ய ஜனங்களும் அவளைச் சிலை என்று நினைக்கிறார்கள். அவள் சிலையில்லை. உண்மையொளி. அது கோயிற் புறத்திலே மாத்திரம் இல்லை:– அகத்திலும் இருக்கிறது. கடல் அசைப்பது; பாதாளத்தின் கீழ் மற்றொரு பாதாளம்; அதன் கீழே ஒன்று, அதன் கீழே ஒன்றாக எல்லையின்றிப் பரந்த திசை முழுதையும் கவர்ந்தது.
எப்படி பார்த்தாலும் ஆரம்பமில்லாமலும், எப்படிப் பார்த்தாலும் முடிவில்லாமலும் இருக்கும் அற்புத வஸ்து.
கோடானகோடி அண்டங்களை ஒரு சிறு மூக்கினால் உடைப்பது.
ஒரு சிறிய மலரின் இதழிலே வர்ணம் தீட்டுவதற்குப் பல்லாயிர வருடங்கள் இருந்து பழகும் நெடுநேர்மை கொண்டது; பெரிதும் சிறிதுமாகிய முதற்பொருள்; பராசக்தி.
இதனைத் தியானத்திலே நிறுத்துகிறோம். இதனை நாவிலே புகழ்ச்சி புரிகின்றோம். செய்கையில் இதனைப் பின்பற்றுகிறோம். நமது மதி தெய்வமாகிறது. நமது செய்வினை தர்மமாகின்றது. ஒரே வார்த்தை; சக்தியை வேண்டியானல் சக்தி கிடைக்கும். “கேட்டது பெறுவாய்” என்று யூத நாட்டு மரியம்மை பெற்ற கிருஸ்து சித்தர் சொல்லுகிறார்.
(முற்றும்.)
— “பாரதியார் கட்டுரைகள்”
பூம்புகர் பிரசுரம். (செப் 1977)
வெள்ளி, ஒக்ரோபர் 12, 2007 at 4:07 முப
ஜெயஸ்ரீ
பாரதி ஒரு நாத்திகர் என்று பெரிய பெரிய ஞாநிகளும் இன்ன பிற முக்கியஸ்தர்களும் தலைகீழாய் நின்று ஸ்தாபிக்க முயற்சிக்கையில் இப்படி பாரதி பராசக்தியை வேண்டுவதை எல்லாம் தேடிப் பிடித்துப் போட்டு அவர்கள் முயற்சியில் மண்ணள்ளிப் போடுகிறீர்களே நியாயமா? பராசக்தி இவர்களுக்கும் நல்ல புத்தியை அருள்வாளாக
அன்புடன்
ச.திருமலை
வெள்ளி, ஒக்ரோபர் 12, 2007 at 11:05 முப
//பாரதி ஒரு நாத்திகர் என்று…//
நாத்திகம், செக்கூலரிஸம் இதற்கெல்லாம் சரியான பொருள் தெரியாதவாறு ஆகிவிட்டதோ என்று எனக்கு ஐயமாக இருக்கிறது.
பாரதி என்றில்லை, எந்தக் கவிஞனுமே கூட கவிதைகளில் ஒரு அழகுக்காக, உணர்ச்சி மேலோங்கி இருக்கவேண்டும் என்பதற்காக எல்லாம் கொஞ்சம் மிகைப்படுத்தி எதையும் புகழந்து எழுதலாம். அதே மாதிரி அவரைப் பற்றி எழுதுபவர்கள் கூட அவரது சிந்தனைகளைத் திரித்து தங்களுக்கு வசதி போல(புகழவோ, தூற்றவோ) மாற்றி எழுதலாம். பெரியாருக்கும் இது நிகழும்.
ஆனால் கட்டுரைகள் அப்படியல்ல, ஓரளவு எழுத்தாளனின் தளத்தை சரியாகச் சொல்ல வல்லது. அதனால் நான் கட்டுரைகளையும் சம்பவங்களையும் நம்புகிறேன். இந்தப் புத்தகம் கிடைத்தது ஒரு ஆச்சரியம் என்றால், இதனை நான் திடீரென்று திறந்து படித்தது அதைவிட ஆச்சரியமான நிகழ்வு.
புத்தகம் முழுவதும் பாரதியின் ஆன்மிகச் சிந்தனைகளைப் படித்து ஆடிப்போயிருக்கிறேன். வேதங்கள், புராணங்கள், உபநிஷதங்கள் இவைகளை ஏற்றிவைத்தே பேசியிருக்கிறார். இவைகளில் வேண்டாதவைகளை(இதர தேவதூஷணை செய்யும் அம்சங்களை) நீக்கிவிட்டு, எல்லா தேச பாஷைகளிலும் மொழிபெயர்க்க வேண்டும் என்றே சொல்லியிருக்கிறார். எழுதிய வருடம் தெரியவில்லை. ஆனால் பின்னால் நாத்திகரானார் என்றால், ஒரு நாத்திகச் சிந்தனை உள்ளவர் தன் கடைசி நாள்களில் ஏன் பார்த்தசாரதி கோயிலுக்குப் போனார், யானையால் கீழே விழுந்தார்? அதிகம் அவரைப் படித்தவர்கள் தான் சொல்ல முடியும். ஆனால் தத்துவம், மாதர், கலைகள், சமூகம் என்று எல்லாவிதமான கட்டுரைகளிலும் புரட்சியான சிந்தனைகளோடு கடவுள் பக்தியும் ஹிந்துமத நம்பிக்கையும் இயைந்தே இருக்கின்றன.
வெள்ளி, ஒக்ரோபர் 12, 2007 at 1:18 பிப
//ஏன் பார்த்தசாரதி கோயிலுக்குப் போனார், யானையால் கீழே விழுந்தார்?//
நாத்திக கருத்துகளைப் பரப்பும் பிட் நோட்டிஸ்களைக் கொடுக்க போயிருக்கலாம் என்கிற பேரல்லல் சிந்தனை உங்களுக்கு ஏன் உதிக்கவில்லை? நீங்களெல்லாம் எழுத்தாளராகவே ஆகமுடியாது என்று இப்போதாவது உணருகிறீர்களா?
ஞாநி சொன்ன கவிதை, 1954 வரை பாரதி கவிதை தொகுதிகளில் கிடையாது. அதை பரலி நெல்லையப்பர் பின்னர் கண்டுபிடித்து வெளியிட்டார். அப்போது கூட அந்தக் கவிதை எந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டது என்று தெரியவில்லை. பரலி நெல்லையப்பரை மறுத்து யாரேனும் அப்போது அது பாரதி கவிதை இல்லை என்று சொல்லியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. நான் கேட்டுக்க்கொண்ட விஷயங்களை உங்களுக்குச் சொல்லி வைக்கிறேன். 🙂
சனி, ஒக்ரோபர் 13, 2007 at 3:21 முப
////ஏன் பார்த்தசாரதி கோயிலுக்குப் போனார், யானையால் கீழே விழுந்தார்?//
//நாத்திக கருத்துகளைப் பரப்பும் பிட் நோட்டிஸ்களைக் கொடுக்க போயிருக்கலாம் என்கிற பேரல்லல் சிந்தனை உங்களுக்கு ஏன் உதிக்கவில்லை
//
ஹலோ – அது என்ன கழுதையா – பிட் நோட்டீஸ் வாங்கித் தின்ன? யானையப்பா யானை.
பாரதியார் பிட் நோட்டீஸ் கொடுக்கறதுக்கு பதில் பத்திரிகையிலேயே எழுதிவிட்டுப் போயிருப்பார்.
பிட் நோட்டீஸ் எல்லாம் ஸ்வீட் கடையில் மிக்சர் பொட்டலம் கட்டறதுக்குத்தான் உதவும்.
‘நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவ சக்தி’ன்னு உருகினவர் பிட் நோட்டீஸ் கொடுக்கறதாவது.
நீங்க சொல்றது சாயாஜி ஷிண்டேவாக இருக்கும். 🙂
சனி, ஒக்ரோபர் 13, 2007 at 9:25 முப
////நாத்திக கருத்துகளைப் பரப்பும் பிட் நோட்டிஸ்களைக் கொடுக்க போயிருக்கலாம்////
////பிட் நோட்டீஸ் எல்லாம் ஸ்வீட் கடையில் மிக்சர் பொட்டலம் கட்டறதுக்குத்தான் உதவும்.////
எங்கள் இணையத் தானைத் தலைவி தமிழச்சியின் செயல்பாடுகளை நக்கலடிக்கும் இந்தப் பின்னூட்டங்கள் அவர் மீது ஏவப்படும் அவதூறு நுண்ணரசியல் என்ற வகையிலே ஹரன்பிரசன்னா, சுந்தர், இவர்களுக்கெல்லாம் எடுத்துக் கொடுத்த ச.திருமலை மற்றும் இவைகளை அனுமதித்த ஜெஸ்ரீ, ஆகியோருக்கு எதிராகவும் எங்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
செவ்வாய், ஒக்ரோபர் 23, 2007 at 8:13 முப
திருமலை, நன்றி. 🙂 இருப்பதை அப்படியே எடுத்துப் போட்டேன், அவ்வளவு தான்.
ப்ரசன்னா,
//..என்கிற பேரல்லல் சிந்தனை உங்களுக்கு ஏன் உதிக்கவில்லை? நீங்களெல்லாம் எழுத்தாளராகவே ஆகமுடியாது என்று இப்போதாவது உணருகிறீர்களா?//
நீங்கள் காதலிக்கவில்லை அதனால கவிஞராக முடியாது, பேரலல் சிந்தனை இல்லை, அதனால் எழுத்தாளராக முடியாது, வேறெங்கோ பார்ப்பது போல் சிந்தனாவாதிப் புகைப்படம் போடவில்லை, அதனால் இலக்கியவாதி ஆக முடியாது என்றெல்லாம் சொல்லிச் சொல்லி en profile ஐ தாழ்த்திப் படிக்கும் எண்ணத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதெல்லாம் புதிதாக ஆக நினைப்பவர்களுக்குத் தான். நான் ‘பொறவி இலக்கியவாதி’ என்பதை எவ்வளவோ முறை சொல்லிவிட்டேன்.
சுந்தர்,
//நீங்க சொல்றது சாயாஜி ஷிண்டேவாக இருக்கும்.//
:)))) சான்ஸே இல்லை. அதே பெப்சுந்தர்.
எச்சரிக்கையாளன்,
//…என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.//
உங்கள் கடமை உணர்வு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. நன்றி.