தேங்காய்ப் பாலுக்கு அடுத்ததாக மிக எளிமையான பாயசமாக பருப்புப் பாயசத்தைத் தான் நினைக்கிறேன். அதிகம் நெய் எல்லாம் சேர்க்காமல் செய்தால் விரத நாள்களில் கூட ஒரு இடைக்கால உணவாக சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1/2 கப்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – 1 கப்
பால் – 1/4 கப்
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
நெய்
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்

paruppu paayasam

செய்முறை:

  • வாணலியில் சிறிது நெய் விட்டு பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குறைவான தீயில் வேகவைக்கவும்.
  • இலைப் பதமாக வெந்ததும் வெல்லம் சேர்த்து நிதானமான தீயில் வைக்கவும்.
  • வெல்லம் கரைந்து பச்சை வாசனை போனதும், பால் சேர்க்கவும்.
  • 2 டீஸ்பூன் நெய்யில் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி பொரித்துச் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவைத்து, பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.

* குக்கரிலும் வேக வைக்கலாம். ஆனால் அதிகம் வெந்து குழைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பாயசம், பருப்பு கீர் மாதிரி ஆகிவிடலாம்.

* அதிகம் பால் விட்டாலும் சுவையாக இருக்கும். ஆனால் பால் அதிகம் சேர்க்காமல் பருப்பின் சுவையும் மணமும் மேலோங்கி இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது.

* கொஞ்சம் நீர்க்க செய்து டம்ளரில் குடிக்கலாம். அல்லது ஓரளவு கெட்டியாக சேர்ந்தாற்போல் செய்து ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடலாம். நம் விருப்பம் தான்.

* ஆறியதும் அதிகமாக இறுகும்.