உண்மையில் உப்புமா செய்வதை விட அதன் ஒன்றுவிட்ட அண்ணா பையனான கிச்சடி செய்வது கொஞ்சம் ரிஸ்க் இல்லாதது. தண்ணீர் அளவு, ரவையின் தன்மை போன்ற நெருக்கடிகள் நம்மை வாட்டுவதில்லை. முன்னே பின்னே இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்துகொண்டு கலக்கலாக இருக்கும். உப்புமா என்ற பெயர் கொடுக்கும் சலிப்பை இது தருவதில்லை என்பதும் கூடுதல் பண்பு.

(1) ரவைக் கிச்சடி

தேவையான பொருள்கள்:

பம்பாய் ரவை – 1 1/2கப்
வெங்காயம் – 2
உருளைக் கிழங்கு – 1
முட்டைக்கோஸ் – 5,6 இலைகள்
கேரட் – 1
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (உரித்தது)
குடமிளகாய் – 1
பீன்ஸ் – 10
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 8
இஞ்சி – சிறிது
எண்ணை – 1/4 கப்
பனீர் – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தண்ணீர் – 5 கப்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித் தழை – சிறிது
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • வாணலி அல்லது பிரஷர் பேனில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்ற வரிசையில் தாளிக்கவும்.
  • அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளை, குடமிளகாய், முட்டைக்கோஸ் சேர்த்து அதிகத் தீயில் வேகமாக அடிப்பிடிக்காமல்  இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும். (*)
  • இப்போது உதிர்த்த பனீர், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூளுடன் கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ரவையைச் சேர்த்து அடுப்பில் நிதானமான சூட்டில் கிளறி, மூடிவைக்கவும்.
  • நன்றாக வெந்ததும் இறக்கி, நெய், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.

* அதிகத் தீயில், காய்கறிகளை, குறைந்த நிமிடத்தில் வேகமாக அரைவேக்காடு அளவிலேயே வதக்கி நிறுத்துவது சைனீஸ் முறை. கொஞ்சம் ஆரோக்யமானதும் கூட.

* எலுமிச்சை சாறுக்குப் பதிலாக புளித் தண்ணீர் அல்லது க்ரீம் உள்ள கெட்டித் தயிர் உபயோகிக்கலாம்.

* தண்ணீருக்குப் பதில் முழுக்கவே தக்காளிச் சாறு உபயோகித்தும் செய்யலாம். தக்காளி பாத் என்று கர்நாடகத்தில் பெயர். இதற்கு புளி, எலுமிச்சைச் சாறு, தயிர் எதுவும் சேர்க்கக் கூடாது.

* கிச்சடிக்கு, ரவையை வறுக்கத் தேவையில்லை.

(2) சம்பா கோதுமை ரவைக் கிச்சடி

ரவைக் கிச்சடி போலவே புளித் தண்ணீர் உபயோகித்து தயாரிக்கலாம். தண்ணீர் மட்டும் ஒன்றுக்கு மூன்று (1:3). மற்ற குறிப்புகள் ரவைக் கிச்சடிக்குச் சொன்னவையே.

(3) சேமியாக் கிச்சடி

ரவை கிச்சடி செய்வது போலவே; ஆனால் ரவையும் சேமியாவும் பாதிப் பாதி அளவு எடுத்து செய்யவேண்டும்.

ரவைக்கு ஒன்றிற்கு 2 பங்கு(1:2), சேமியாவிற்கு ஒன்றிற்கு ஒரு பங்கு (1:1), மற்றும் காய்கறிகளுக்காக அதிகமாக ஒரு கப் தண்ணீர் சேர்த்து செய்யவேண்டும்.

* உப்புமாவிற்குச் செய்வதுபோல், இதில் ரவையை வறுக்கத் தேவை இல்லை. சேமியாவைத் தனியாக வேகவைக்கத் தேவை இல்லை. 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி, வெங்காயச் சட்னி, தக்காளிக் கொத்சு, சாம்பார் வகைகள்.