புதன் கிழமை, மார்ச் 19, 2008
மிஸ்ஸி ரொட்டி (1) - குஜராத் (Missi Roti, मिस्सी रोटी)
Posted by Jayashree Govindarajan under சப்பாத்தி/பூரி, சமையல் குறிப்பு, சிற்றுண்டி, தமிழ்ப்பதிவுகள் | குறிச்சொற்கள்: கோதுமை மாவு, பசலைக் கீரை, பட்டாணி மாவு, மைதா மாவு, வெங்காயம் |தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு - 1 கப்
மைதா மாவு - 1 கப்
பட்டாணி மாவு - 1 கப் *
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பெரியது)
பசலைக் கீரை - 1 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்
நெய் அல்லது வெண்ணெய்
செய்முறை:
-
கழுவிய பசலைக் கீரை, வெங்காயத்தை மிகமிகப் பொடியாக அரிந்து கொள்ளவும்.\
-
பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
-
கோதுமை மாவு, மைதா, பட்டாணி மாவு, மிளகாய்த் தூள், உப்பு, அரைத்த மிளகாய் விழுது, நறுக்கிய கீரை, வெங்காயம், எண்ணெய் சேர்த்து நன்றாக அழுத்திப் பிசையவும்.
-
தேவைப்பட்டால் சிறிது வெந்நீர் விட்டு (கீரை, வெங்காயம் சேர்ப்பதால் தண்ணீர் அதிகம் தேவைப்படாது.) மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் சுமாராகப் பிசைந்து கொள்ளவும்.
-
பிசைந்த மாவை துணியில் சுற்றி அல்லது ஈரமான மூடிபோட்ட உலர்ந்த பாத்திரத்தில் அரைமணியிலிருந்து ஒருமணி நேரம் வரை வைத்திருக்கவும். மாவு சிறிது தளர்வாகியிருந்தால் ப்ரிட்ஜிலும் வைக்கலாம்.
-
ஊறிய மாவை எடுத்து மீண்டும் அழுத்திப் பிசைந்து, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
-
உருண்டைகளை மைதா மாவு தோய்த்து, சிறிய சப்பாத்திகளாக இட்டு, நடுவில் சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி நான்காக மடித்து, முக்கோண வடிவில் வைத்துக் கொள்ளவும்.
-
மடித்து வைத்துள்ள சப்பாத்திகளை மேலும் மைதா மாவு தோய்த்து சப்பாத்திகளாக இட்டு அடுப்பில் தோசைக்கல்லில் போடவும்.
-
அடிப்பாகம் சிறிது காய்ந்து மேலே சிறிய கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும்போது திருப்பிப் போடவும்.
-
மீண்டும் கொப்புளங்கள் வரும்போது ஃபுல்கா செய்வது மாதிரி ஒரு துணியால் அழுத்தி அழுத்தித் திருப்பிவிடலாம் அல்லது நேராக அடுப்பில் காட்டி வாட்டலாம். விரும்புபவர்கள் இந்த நிலையில் மட்டும் சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு கரண்டியால் அழுத்திக் கொடுத்து சாதாரண சப்பாத்தி மாதிரியும் வேகவைக்கலாம்.
-
இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும். எண்ணெய் சேர்க்காமல் ஃபுல்காவாகச் செய்திருந்தால், கல்லிலிருந்து எடுத்ததும் மேல்புறம் சிறிது நெய் அல்லது வெண்ணெய் தடவிப் பரிமாறலாம்.
* பட்டாணி மாவு கிடைக்காதவர்கள், அரை கப் மஞ்சள் பட்டாணியை தண்ணீரில் 4 மணி நேரம் ஊறவைத்து, பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்துக் கலந்துகொள்ளலாம். நான் அப்படித்தான் செய்திருக்கிறேன்.
* மடித்து இட நேரமில்லாதவர்கள் ஒரே முறை மட்டும் வட்டமாக இட்டும் செய்யலாம். இந்த முறையிலும் நன்கு உப்பி கொப்புளங்கள் வரும்; மென்மையாக இருக்கும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தக்காளித் தொக்கு, ஊறுகாய், தயிர்ப் பச்சடி, சப்ஜி வகைகள்….



புதன் கிழமை, மார்ச் 19, 2008 at 7:49 பிற்பகல்
நன்றி,
பட்டாணி மாவு இல்லையென்றால் கடலை மாவு உபயோகித்துச் செய்யலாமா? நான் ஹரியானாவில் சாப்பிட்ட மிஸ்ஸி ரொட்டி கடலை மாவில்தான் செய்திருந்தார்கள் என நினைக்கிறேன்(டாபாவில்).வெண்ணெய் தொட்டுக்கொண்டு சாப்பிட்ட ஞாபகம்.
புதன் கிழமை, மார்ச் 19, 2008 at 8:21 பிற்பகல்
மதுரைசொக்கன், செய்யலாம். ஆனா அது குஜராத் இல்லை. பஞ்சாப், ராஜஸ்தான்னு பிரிஞ்சு போகணும். அதெல்லாமும் இங்கே வரும். லஞ்சுக்கு எடுத்துப் போன அப்பா, பெண்ணிற்கு இன்று எதுவும் மிஞ்சவில்லையாம். அதனால் இதையும் ஒருமுறை செய்துபார்த்துவிடுங்கள்.
புதன் கிழமை, மார்ச் 19, 2008 at 10:40 பிற்பகல்
உங்கள் அறிமுகம் இல்லாத எந்த உணவுபண்டத்தையும் பார்க்கவே சகிக்கவில்லை.. மற்றபடி செய்துபார்த்து (மனைவி செய்து நான் ருசிபார்த்து) பின் வருகிறேன்..
சனிக்கிழமை, மார்ச் 22, 2008 at 2:20 பிற்பகல்
hai jash,
Very nice to see this receipy. But instead of pasalai kerai can we add palak. Because here{mysore} i don’t what is the name of pasalai kerai{soppu}. by RK
புதன் கிழமை, மார்ச் 26, 2008 at 6:08 பிற்பகல்
நேற்று என் மனைவி மிஸ்சி ரொட்டி செய்திருந்தார்கள். கொஞ்சம் தண்ணீர் அதிகமாகி அதை சரி செய்ய மாவுடன் பிசைந்து செய்தபோது உப்பே இல்லாத ஒரு ரொட்டி கிடைத்தது. அந்த மாதிரி நேரத்தில் என்ன செய்தால் கெட்டியாகவும் அதே சமயம் உப்பு குறையாமலும் கிடைக்கும் ??? ஆனால் பார்க்க நன்றாக இருந்தது. வடிவம்தான் கிடைக்கவில்லை..
ஜெயக்குமார்
புதன் கிழமை, மார்ச் 26, 2008 at 6:14 பிற்பகல்
உங்கள் பதிவின் தலைப்பும், குறிச்சொற்களும், பின்னூட்டங்களும் மிக மிகப் பெரிதாய் தெரிகிறது. மற்ற விஷயங்கள் எல்லாம் சரியான அளவில் தெரிகிறது. எனக்கும் மட்டுமா இல்லை மற்ற எல்லோருக்கும் இந்த பிரச்சினை இருக்கிறதா தெரியவில்லை.. முடிந்தால் சரிசெய்யுங்கள்.
அன்புடன் ஜெயக்குமார்
வியாழன், மார்ச் 27, 2008 at 7:37 நான்
இங்கு வரும் பதிவுகள் உண்பதற்கல்ல. பார்க்கத்தான். பார்க்க அழகாக இருந்தது என்னும்போதே நீங்கள் சரியாக சமைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். பார்த்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அதனால்தான் புகைப்படமெல்லாம் போடுகிறார்கள்.
வெள்ளிக்கிழமை, மார்ச் 28, 2008 at 1:33 பிற்பகல்
ஜெயக்குமார், சில பண்டங்களைப் பார்த்தவுடன் நானும் முன்பு இதுமாதிரி அரண்டிருக்கிறேன். இப்போதெல்லம் முன்முடிவுகள் இல்லாமல் சமைக்கிறேன். இது அறிமுகம் இல்லாத உணவு என்பதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அநேகமாக தந்தூரி வகைகளில் எல்லாம் ஹோட்டல்களிலும் இருக்கும். கொஞ்சம் நம்பத்தகாத தரத்தோடு கருக்கியிருப்பார்கள். நாம் வீட்டில் செய்யும்போது புதிதாகவும், சுத்தமாகவும், தந்தூரி வகையாக இல்லாமல் சாதா ரொட்டிவகையிலேயே அந்தச் சுவைக்கு செய்துகொள்ளலாம் என்பது கூடுதல் நன்மை.
உப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மாவு சேர்க்கவேண்டியதாகிப் போனதா?
ஆனாலும் சேர்க்கிற மாவுக்கான (தூள்)உப்பையும் காரத்தையும் சேர்த்துப் பிசைந்தால் நன்றாகக் கலந்துவிடும். பயப்படத் தேவை இல்லை.
பார்க்க நன்றாக இருந்தது, வடிவம் தான் வரவில்லை என்றால் என்ன அர்த்தம்? ஏதாவது கவிதைக்கான பின்னூட்டமா? வடிவம் நன்றாக இருந்தால் தான் பார்க்க நன்றாக இருக்கும். எனக்கு இந்த வாக்கியம் புரியவில்லை. ப்ரசன்னா விளக்கினாலும் மகிழ்ச்சியே.
வெள்ளிக்கிழமை, மார்ச் 28, 2008 at 1:35 பிற்பகல்
ramakannan, பசலைக் கீரை ஒருவகை கொடியில் வளரும். தடித்த இலைகளோடு உள்ளே வழவழவென்றிருக்கும். அடுத்தமுறை வாங்கும்போது அதன் படமும் சேர்க்கிறேன். கிடைக்காவிட்டால் பாலக் உபயோகிக்கலாம்.
சனிக்கிழமை, மார்ச் 29, 2008 at 8:27 பிற்பகல்
Hello Jash,
Thankyou jash………RK