இந்த உணவு நம் ஊர் சாம்பாரின் ஆந்திர வெர்ஷன். மற்ற நாள்களிலும் இதை தயாரித்தாலும் முக்கியமாக நாம் வருடப் பிறப்பிற்கு அறுசுவையில் மாங்காய்ப் பச்சடி செய்வதுபோல் அவர்கள் இதை அறுசுவை உணவாக தெலுங்குவருடப் பிறப்பன்று(உகாதித் திருநாள்) செய்கிறார்கள்; மற்றும் முக்கியமான பண்டிகை நாள்களிலும் செய்கிறார்கள். ஆனாலும் புலம்பெயர்ந்த பல ஆந்திரப் பெண்களுக்கு இது குறித்து தெரியவில்லை. அல்லது தெலுங்கு பிராமணர்கள் மட்டுமே அதிகம் இதை செய்கிறார்கள் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. எனக்கு சரியாகத் தெரியவில்லை.
தேவையான பொருள்கள்:
புளி – எலுமிச்சை அளவு
வெல்லம் – எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கடலை மாவு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5, 6
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.
காய்கறிகள்: சுரைக்காய், பரங்கிக்காய், முருங்கை.
செய்முறை:
-
புளியை நன்கு கரைத்து வடித்துக் கொள்ளவும்.
-
காய்களை 2″ நீள அல்லது சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து, காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயத்தை வரிசையாகச் சேர்த்து வறுத்து, ஆறியதும் நைசாகப் பொடித்துக் கொள்ளவும்.
-
மீண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் வைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
-
நறுக்கிய காய்களைச் சேர்த்து ஒரு நிமிடம் லேசாக வதக்கவும்.
-
சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வேகவைக்கவும்.
-
காய்கறி பாதி வெந்ததும் புளிநீர் சேர்க்கவும்.
-
புளிநீர் கொதித்து பச்சை வாசனை போனதும் வறுத்து அரைத்த பொடி சேர்த்து மேலும் 4, 5 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
-
இறக்குவதற்கு நீரில் கரைத்த கடலை மாவு, பொடித்த வெல்லம் சேர்த்து மேலும் ஒரு கொதிவிடவும்.
-
அடுப்பிலிருந்து இறக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து பரிமாறலாம்.
* பொதுவாக புடலை, வெண்டை போன்ற காய்களிலும் செய்து அந்தந்த காய்கறிகளின் பெயரோடு இந்த புலுசை அழைத்தாலும் மொத்தமாக ‘முக்கல புலுசு’ என்று கலவையான காய்களோடு செய்யும்போதே குறிப்பிடப் படுகிறது. அவற்றிலும் மேலே சொல்லியிருக்கும் மூன்று காய்கள் மட்டுமே முக்கியமானவை.
* வெங்காயம், பூண்டு, சேர்ப்பதில்லை.புலுசு தயாரித்தபின் கடைசியிலும் தாளிக்கலாம்.
* வறுத்து அரைக்காமல், நேரடியாக மிளகாய்த் தூள், கடுதுத் தூள், வெந்தயத் தூள் இருந்தாலும் உபயோகித்துக் கொள்ளலாம். வழமையாகச் செய்பவர்கள், பொதுவாக இந்தப் பொடியையும் நம் சாம்பார்ப் பொடி போல் முதலிலேயே மொத்தமாக தயாரித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கிறார்கள்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய், பருப்பு கலந்த சாதத்துடன் பரிமாறலாம்.


வியாழன், ஜனவரி 31, 2008 at 12:22 பிற்பகல்
பிறந்தநாள் கழித்து 27 நாட்களுக்குப் பின் புலுசு கொண்டு வந்திருக்கிறீர்கள்.நன்றி.
சமீபத்தில் ஒரு வீட்டில் தொட்டுக் கொள்ள ஒரு தொக்கு போட்டார்கள்.ஆரஞ்சுத்தோல் தொக்கு என்று சொன்னார்கள்.அதை எப்படிச் செய்வது,சொல்லுங்களேன்,சமையல் சூபர்ஸ்டார் அவர்களே.
வியாழன், ஜனவரி 31, 2008 at 3:46 பிற்பகல்
தலைப்பைப்பார்த்தால் “முக்கல் முனகல்”ங்கிற மாதிரி இருந்தது.வெறும் தோசை மட்டும் வார்க்கத் தெரிந்தவர்க்கு ஏதாவது எளிதான ரிசிபி இருக்கா?
டெஸ்ட் செய்து பார்க்கிரதுக்கு ர.மணிகள் ஒத்துக்கிறது இல்ல போல.இல்லேன்னா தெரிஞ்சிருக்குமே =)
வியாழன், ஜனவரி 31, 2008 at 4:12 பிற்பகல்
நெஜமாவோ கம்யூட்டர் சரி ஆயிடுச்சா? அப்ப கடவுள்னு ஒருத்தர் இருக்கிறது பொய்யா?
வியாழன், ஜனவரி 31, 2008 at 6:21 பிற்பகல்
அப்பாடா ஜெயஸ்ரீ எங்க போயிட்டிங்க?/
இதை நாளையே செய்து பார்க்கிறேண்.
பயங்கர வாசனை தூக்கும் போல இருக்கே:)))
வியாழன், ஜனவரி 31, 2008 at 7:38 பிற்பகல்
welgum back.
வியாழன், ஜனவரி 31, 2008 at 8:32 பிற்பகல்
அக்கா என் பிறந்தநாளை சிறப்பிக்க பதிவு போட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 1, 2008 at 12:28 மு.பகல்
ஜெயஸ்ரீ,
ஆந்திர நேகிழமுதை முயற்சி பண்ணனும். இந்த பதிவுக்கு நன்றி.
முயற்சி பண்ணியவை:
பொங்கல்: 27 நாட்களும் சுவையாக இருந்தாலும் நெய் அதிகம் என்று கமெண்ட் வீட்டில்
சக்கரை பொங்கல்: நன்றாக வந்தது
அக்கார வடிசில்: சாதம் கிழே தங்கிவிட்டது. மேலே பாகும் நெய்யும் கலந்த நீர். வேற வழி இல்லாம எல்லோரும் ‘முழங்கை வழிவார’ முடித்தோம்.
ததியோனம்: நன்றாக வந்தது
தினமும் அரவணை. ஆனால் ஒரிஜினல் சுவை தெரியாதலால், ஒன்றும் சொல்லமுடியவில்லை
கேள்வி:
எள்ளுருன்டை (எள்ளும் வெல்லமும் கலந்தது) படைக்கற வழக்கம் கோயிலில் உண்டா?
//
தலைப்பைப்பார்த்தால் “முக்கல் முனகல்”ங்கிற மாதிரி இருந்தது
//
லோல் (lol – laughing out loud)
கிருஷ்ணா
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 1, 2008 at 11:11 மு.பகல்
hello jash,
where u went after a longggggggggggggg days back. From this receipy i understand one thing u went Andra. Very nice to saw ur receipy so shall we make dosa, idly also know. Daily i expect ur receipy ur friend Ramakannan from Mysore.
சனிக்கிழமை, பெப்ரவரி 2, 2008 at 12:52 பிற்பகல்
புளிக்குழம்புன்னு சொல்ல மாட்டோமா? அதுதான் கொஞ்சம் நிறம் மாறி வந்திருக்கு முக்கலப் புலுசாக!
கமலா
ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 3, 2008 at 1:17 மு.பகல்
Welcome Back.
திங்கட் கிழமை, பெப்ரவரி 4, 2008 at 5:58 பிற்பகல்
மதுரை சொக்கன், எலுமிச்சை தோல், ஆரஞ்சுத் தோல்ல எல்லாம் தொக்கு செய்யலாம். நீங்க சூப்பர் ஸ்டார்னு என்னை ஓட்டினதால சொல்லணுமான்னு யோசிக்கறேன்.
Adiya, ramakannan, Suja Rajkumar நன்றி.
திங்கட் கிழமை, பெப்ரவரி 4, 2008 at 6:00 பிற்பகல்
////வெறும் தோசை மட்டும் வார்க்கத் தெரிந்தவர்க்கு ஏதாவது எளிதான ரிசிபி இருக்கா?
டெஸ்ட் செய்து பார்க்கிரதுக்கு ர.மணிகள் ஒத்துக்கிறது இல்ல போல.இல்லேன்னா தெரிஞ்சிருக்குமே =)////
சாமான்யன், ரங்கமணியோட எல்லாம் கலந்துபேசி செய்ய இதுஎன்ன உங்க பங்குச்சந்தை மேட்டரா? நம்ப இஷ்டம் தான்.
எளிய ரெசிபின்னு தோசைகள்லயே கேக்கறீங்களா? இங்க ஒன்னு போட்டிருக்கேன். இனி தொடர்ந்து இந்த மாதிரி எளிய தோசைகள் வரும்.
திங்கட் கிழமை, பெப்ரவரி 4, 2008 at 6:05 பிற்பகல்
மோகன்தாஸ் தம்பி, வாழ்த்துகள். அடுத்த வருஷம் ஸ்வீட்டே போட்டுடலாம்.
ஹரன்ப்ரசன்னா, கடவுள்னு ஒருத்தர் மட்டும் இல்லை. நிறையபேர் இருக்காங்க. நீங்க நான் வேண்டின ஆளையே வேண்டியிருக்கீங்க போல. அதான் அவர் எனக்கு அருளவேண்டியதாப் போச்சு.
ரேவதி நரசிம்மன், நல்லா வந்ததா? சொல்ல மறந்துட்டேன். பொங்கல் பண்டிகை வந்ததுல எங்க வீட்டுல வெல்லம் தீர்ந்திடுச்சு. அதனால வெல்லம் போடாமத் தான் செஞ்சேன்.
நல்லா இருந்தது.
திங்கட் கிழமை, பெப்ரவரி 4, 2008 at 6:20 பிற்பகல்
கிருஷ்ணா,
அதென்ன நெகிழமுதுன்னு சொல்றீங்க? அப்ப கூட்டுக்குத் தான் நெகிழ்கறியமுதுன்னு பேரா?
வெண்பொங்கலுக்கு பாதிக்குப் பாதி ரிஃபைண்ட் ஆயில் உபயோகிச்சா ரொம்ப சுவையா இருக்கும். நெய் குறைச்சும் செய்யலாம். சில கோயில்கள்ல பேருக்கு விடற கொஞ்சம் நெய்லயே இந்தப் பொங்கல் எவ்ளோ சுவையா இருக்கு.
அக்கார அடிசில் எப்படி கீழ தங்கும். சேர்ந்தமாதிரி குழைந்து வேகுமே. நான் இந்த வருஷம்தான் எல்லாத்துக்கும் படம் ஏத்தியிருக்கேன். (அக்கார அடிசில், தயிர்சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அவியல், கதம்பச் சாம்பார்..)
சில கோயில்களில் எள் சாதம்கூட கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே சனீஸ்வரன் கோயில் நவதானியங்களும் நாட்டுச்சர்க்கரையும் கலந்து இடித்த பொடி தருவார்கள். எள் உருண்டை நான் கேள்விப்பட்டதில்லை. வீட்டிலேயே கிருஷ்ண ஜயந்தி தவிர பிற பண்டிகைகளுக்கு செய்து கேட்டதில்லையே. விசாரித்துச் சொல்கிறேன்.
திங்கட் கிழமை, பெப்ரவரி 4, 2008 at 6:23 பிற்பகல்
kalyanakamala, நினைவுப்படுத்தினீங்க. புளிக்குழம்பு படம் பிடிச்சு பல நாள் ஆச்சு. போடணும். ஆனா அதுல கடுகு, வெந்தயம், வெல்லம் சேர்ப்போமா? பச்சை மிளகாய் தூக்கலா இருக்காது? ஆனா நீங்க சொல்றது சரி. அடிப்படியா சில பொருள்களை மட்டும் வெச்சு மாறி மாறி செய்றதுதான் இந்தக் குழம்புகள் எல்லாம்.
திங்கட் கிழமை, பெப்ரவரி 11, 2008 at 4:11 பிற்பகல்
சொக்கா,என்னடா மதுரைக்கு வந்த இந்த சோதனை?சமையல்குறிப்புகளை சுவை பட விளக்குவதோடு பார்த்தவுடனே சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை எற்படுத்தும் படங்களையும் தருகிறாரே என்ற பிரமிப்பில் “சூபர்ஸ்டார்” எனக்குறிப்பிட்டதை,ஓட்டுகிறேன் என்று சொல்லிவிட்டாரே,ஜெயஸ்ரீ!என் நேரம்!
செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 12, 2008 at 7:50 பிற்பகல்
முக்கல புலுசு, பப்பு புலுசு ரெண்டுமே ரொம்ப நல்லா இருந்தது. பப்பு புலுசு பாசிப்பருப்பு சேர்த்து செய்தேன். சாம்பாருக்கு ஒரு நல்ல மாற்று.
கிட்டத்தட்ட இதே செய்முறையில் மெந்த்தி புலுசு(வெந்தயக் குழம்பு) கேள்விப்பட்டிருக்கீங்களா ?
வறுத்து அரைக்க (வெறும் வாணலியில்)
வெந்தயம் – 1 1/2 தே.க
மிளகாய் 6 அல்லது 7
அரிசி – 1/2 தே.க
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -2
புளி – சிறிய எலுமிச்சை அளவு.
வெல்லம் – பெரிய நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணையில் கடுகு, கருவேப்பிலை 4 வெந்தயம் தாளித்து புளி நீர் ஊற்றிஒரு கொதி வந்தபின் அரைத்து வைத்த பொடியைப் போட்டு 2, 3 நிமிடம் கொதித்த பின் நறுக்கி வைத்த வெங்காயத்தில் பாதியை (வதக்காமல்) சேர்த்து இன்னும் இரண்டு நிமிடம் கொதித்தபின் மீதமுளள வெங்காயத்தைச் சேர்த்து வெல்லம் சேர்த்து இறக்கி உடனே பாத்திரத்தை மூடிவிட வேண்டும்.
வெங்காயத்தைப் பச்சையாகச் சேர்ப்பதுதான் இதில் சிறப்பு. வெல்லம் அவசியம் சேர்க்க வேண்டும். பொங்கல் , மற்றும் அரிசி உப்புமாவுக்கு நல்ல ஜோடி.
வியாழன், பெப்ரவரி 14, 2008 at 11:14 மு.பகல்
சொக்கன்,
///சமையல்குறிப்புகளை சுவை பட விளக்குவதோடு பார்த்தவுடனே சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை எற்படுத்தும்…///
உண்மையா சொல்லுங்க, இதெல்லாம் உங்க சூப்பர் ஸ்டார் செய்றாரா, பின்ன ஏன் எனக்கு அந்தப் பேர்? சரி விடுங்க, ஊர்பேரைப் பாத்ததும் பாசத்துல கலாய்ச்சிட்டேன்.
ஜெயஸ்ரீ, “மேந்தி புலுசெல்லாம் மீன் போட்டு செய்யணும், உனக்கு வராது”ன்னு என்னை கழட்டிவிட்டுட்டாங்க. இப்படியும் செய்லாமா? செஞ்சுடலாம். நன்றி.
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 15, 2008 at 10:31 பிற்பகல்
ஜெயஸ்ரீ, நீங்க சொன்னப்புறம் வலையில் மெந்திப் புலுசு ன்னு தேடி பாத்தேன். மீன் சேர்த்து செய்வதுதான் ஒரிஜினல் மெந்திப் புலுசு போல இருக்கு. இத நான் ஒரு potluck dinnerல பார்த்து, நல்லா இருந்ததால செய்முறை கேட்டு வாங்கினேன். இதோட பேர் வேற எதாவதாவும் இருக்கலாம்.
செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 19, 2008 at 11:35 மு.பகல்
அப்படி எல்லாம் விட்டுட முடியுமா ஜெயஸ்ரீ? கைவசம் ஒரு ரெசிபி கிடைச்சிருக்கு, செஞ்சு பார்க்காம இருக்கத்தான் முடியுமா… உப்புச்சாரே, ‘கருவாடு மைனஸ்’ செஞ்சு அசத்தியிருக்கோம். இதுவும் மெந்தி புலுசு (மீன் மைனஸ்)ன்னு போர்டு வெச்சுடலாம்.