தேவையான பொருள்கள்:
காரா பூந்தி
ஓமப் பொடி
காராச் சேவு
ரிப்பன் பக்கோடா
நிலக்கடலை
பொட்டுக் கடலை
முந்திரிப் பருப்பு
பாதாம் பருப்பு
கறிவேப்பிலை
எண்ணெய்
நெய்
மிளகாய்த் தூள், உப்பு (விரும்பினால்)



செய்முறை:
- ஓமப்பொடி, காராச் சேவு, ரிப்பன் பக்கோடா இவற்றை தேவையான அளவு எடுத்து ஒடித்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- காராபூந்தியையும் சேர்த்துக் கொள்ளவும்.
- முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
- நிலக்கடலையை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும் அல்லது எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
- பாதாம் பருப்பை அப்படியே அல்லது ஊறவைத்து உலர்த்தி எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
- பொட்டுக் கடலையை சிறிது சிறிதாகப் போட்டு எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
- கறிவேப்பிலையையும் எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
- எல்லாவற்றையும் கைபடாமல் ஒரு கரண்டியால் கலந்து, காற்றுப் புகாத டப்பாவில் வைத்துக் கொள்ளவும்.
- மேலே உள்ள பட்சணங்களில் சேர்த்துள்ள காரமே(ஓமம், மிளகு, மிளகாய்த் தூள்) போதுமென்றால் அப்படியே விட்டு விடலாம். மேலும் காரம் வேண்டுமென்று நினைப்பவர்கள்– சிறிது நெய்யை உருக்கி, அதில் மிளகாய்த் தூள், உப்பைக் குழைத்துக் கொள்ளவும். நிலக்கடலை, பாதாம், பொட்டுக் கடலை, முந்திரிப்பருப்பை மட்டும் கலந்து அதனோடு இதனையும் சேர்த்துப் பிசிறி, மொத்த மிக்ஸரில் இந்தக் கலவையைக்கலந்துவிட்டால் சீராகக் கலந்துவிடும். தனித்தனியாக இவைகளை மிக்ஸரில் கலக்கப் பார்த்தால் சரியாக வராது.



ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 11, 2007 at 12:25 மு.பகல்
எப்பா… ஃபோட்டோஸ் அருமை!!
மிக்சர் மிகப் பெரிய ப்ரஜெக்ட்!
வியாழன், நவம்பர் 15, 2007 at 10:46 பிற்பகல்
bsubra thanks. ஆனா பெரிய ப்ராஜக்ட் இல்லை. கடலை மாவு, அரிசி மாவு எல்லாம் ரெடியா வெச்சுகிட்டா இரண்டே மணி நேரத்துல ஒரு பெரிய்ய எவர்சில்வர் டப்பா நிறைய மிக்சர். இன்னும் மைதா பிஸ்கட் சேர்க்கறது இதுல முக்கியம். நேரமில்லை. அதுக்குள்ள கனிமொழிக்காக ரசகுல்லா செய்யப் போயிட்டேன். மிக்சர் இப்படித் தான் மெனக்கெட்டு செய்யணும்னு எதுவும் இல்லை. அம்மா பாட்டி காலத்து குறிப்பை எல்லாம் முதல்ல சொல்லிடணும்னு இதை முதல்ல சொல்லியிருக்கேன். எல்லாமே கடையில தனித்தனியா வாங்கி chak-a-chak னு செய்றதெல்லாமும் பின்னால வரும்.
செவ்வாய்க் கிழமை, நவம்பர் 20, 2007 at 11:25 மு.பகல்
எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்?
வியாழன், நவம்பர் 22, 2007 at 3:36 பிற்பகல்
தூயா,
பொதுவா கடலை எண்ணெய்ல செஞ்சா இரண்டு நாளைக்கு மேல சிக்கு வாசனை வர ஆரம்பிச்சுடும்.
சன்ஃப்ளவர் ரிஃபண்ட் ஆயில்ல செஞ்சா 4,5 நாள்களுக்கு நிச்சயம் நல்லா இருக்கும்.
தேங்காயெண்ணை ஒரு வாரம் பத்து நாள்களுக்குக் கூட கெடாது. கல்யாண பட்சணம் எல்லாம் அநேகமா அதுல தான் செய்வாங்க. சுவையும் ரொம்ப நல்லா இருக்கும், முக்கியமா முறுக்கு வகைகள். ஆனா கொழுப்பு மிக மிக அதிகம்.
நான் Saffola Refined Kardi Oil ல செஞ்சேன்.
[உங்களுக்கு லொள்ளா பதில் சொல்லணும்னா,
"நாட்கள்" பிரயோகம் தவறு, "நாள்கள்" தான் சரியான பிரயோகம்னு எப்பவும் சுஜாதா சாட்ல சொல்வாரு. "நாட்கள்"னா அன்னிக்கித்தான் இறக்கின கள். அன்னிக்கி மட்டும் தான் நல்லா இருக்கும்னு நினைக்கறேன். அனுபவம் இல்லை.]